partnership

கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு

கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் மூலம் தனிநபர், இலக்கு மக்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகள் நிலைத்த முன்னேற்றத்தினை விரைவாக அடைந்திட அவர்களுக்குரிய தகவல்கள் மற்றும் திட்டங்கள் எளிதில் கிடைக்க செய்து சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகுக்கிறது. .

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது அரசின் பிற துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், பணிகள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் ஒரு உந்து சக்தியாக செயல்படுகிறது. இவ்வியக்கமானது நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது, அவைகளாவன 1.வறுமையற்ற நிலை, 2.அனைவருக்கும் உணவு (உத்திரவாதம் அளித்தல்) மற்றும் பசியற்ற நிலை, 3.ஆரோக்கியமான நல்ல உடல் நலம், 5.ஆண்- பெண், சமத்துவம், 6.சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், 10.பாகுபாடுகளை குறைத்தல், மற்றும் 12.பொறுப்புணர்வுடன் கூடிய உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவைகளை அடைவதாகும்.

சமூக உள்ளாக்கம் மற்றும் சமுதாய மேம்பாடு

விடுபட்ட இலக்கு மக்களான நலிவுற்றவர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பட்டியலின பழங்குடியின மக்களில் விளிம்பு நிலையிலுள்ள குடும்பங்களை கண்டறிதல், நலிவுற்ற பழங்குடியின குடும்பங்கள், பெண்கள் குடும்பத் தலைவராக உள்ள குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மனித கடத்தலில் இருந்து மீட்கப்பட்டவர்கள், முதிர்க்கன்னிகள், ஆதரவற்ற முதியோர்கள், மீட்கப்பட்ட கொத்தடிமைகள், நரிக்குறவர் குடும்பங்கள், மலைப்பிரதேசங்களில் வசிக்கும் தொலைதூர குக்கிராமங்களிலுள்ள குடும்பங்கள் ஆகியவர்களை ஒருங்கிணைப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

புதிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவைகளை வலுப்படுத்திட பயிற்சிகள் நிதிக்கல்வி, சுழல்நிதி வழங்குதல், சேமிப்பு பொதுநிதி ஆகியவைகளின் மூலம் உள்கடன் வழங்குதலை அதிகரிக்க செய்து சேமிப்பு சுழற்சி உறுதி செய்யப்படுகிறது.

உணவு, ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் குடிநீர் & தன் சுத்தம்

ஊட்டச்சத்து மிக்க உணவின் மூலம் மட்டுமே சிறந்த உடல் நலத்தை அடைவது சாத்தியமாகும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஊட்டச்சத்து உணவு, உடல்நலம் மற்றும் குடிநீர், தன் சுத்தம் ஆகிய காரணிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஒரு கூட்டு முயற்சியாக கீழ்க்கண்ட செயல்பாடுகள் மூலம் சமூகம் சார்ந்த அமைப்புகளை ஆற்றல்படுத்திட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 2021-2022ம் ஆண்டில் ரூ.3.37 கோடிகள் நிதியானது மாநில வளப்பயிற்றுநர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல், சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கு பாரம்பரிய உணவு போட்டிகள் நடத்துதல், சமூக வல்லுநர்களுக்கு மதிப்பூதியம் வழங்குதல் போன்றவைகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

  • உணவு, ஊட்டச்சத்து, நல்வாழ்வு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து அனைத்து சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  • ஊரகப்பகுதிகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடுகளை போக்கும் வகையில் ஊராட்சி அளவில் சத்தான உணவு, உடல்நலம், குடிநீர் மற்றும் தன் சுத்தம் குறித்து வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும்.
  • சுய உதவிக்குழு பெண்களின் குடும்பங்களில் சத்துணவு, உடல்நலம், மற்றும் சுகாதார செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றது.

இத்திட்டம் தொடர்பான பணிகளை சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கல்வித்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக செயல்படுத்தப்பகிறது. மேலும் பணியாளர்கள், சமூக அமைப்புகளான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வளப்பயிற்றுநர்கள், சுய உதவிக்குழுக்கள், சமூக செயற்பாட்டுகுழுக்கள் ஆகியவைகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பாராம்பரிய உணவுகளின் ஊட்டச்சத்து மகத்துவத்தை விளக்கிடவும், ஊக்குவித்திடவும் சமுதாயம் சார்ந்த போட்டிகள் நடத்தப்படும்.

பாலின சமத்துவம் தொடர்பான பணிகள்

2020-2021ம் ஆண்டு முதல் பாலின பாகுபாடுகளை களைந்து பாலின சமத்துவத்திற்குரிய பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2021-2022ம் ஆண்டில் ரூ.3.11 கோடிகள் மாநில வளப்பயிற்றுநர்களை இப்பணிகளில் ஈடுபடுத்துதல், சமுதாய வளப்பயிற்றுநர்கள் மற்றும் திறன் வளர்ப்பு ஆகிய இனங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட பாலினம் தொடர்பான பிரச்சனைகளை கண்டறிந்து அவைகளை தடுத்திடும் செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது

  • குழந்தை திருமணம்
  • குடும்ப வன்முறை
  • பாலியல் துன்புறுத்தல்

அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில் ஒவ்வொரு குழுவிலும் ஆர்வமாக உள்ள ஒரு நபரை பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துபவராக தேர்வு செய்து பாலின பாகுபாடு (GPP) பணிகளை கிராம அளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது

அனைத்து ஊராட்சிகளிலும் சமூக செயல்பாட்டுக்குழு (SAC) அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு வட்டார பாலின வழிகாட்டி மையம் அமைத்து பாலினம் தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படும்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்தல்

வறுமையை ஒழிக்க பன்முக செயல்திட்டங்களுடன், மக்கள் முழு பங்கேற்புடன் கிராம வறுமை குறைப்புத் திட்டம் (VPRP) தமிழகத்தில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22ல் ரூ.10.29 கோடிகள் பயிற்சி வழங்குதல், கிராம வறுமை குறைப்புத் திட்டம் தயாரித்தல், மாநில வளப்பயிற்றுநர்கள் மற்றும் சமூக வளப்பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் வழங்குதல் ஆகியவைகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த கிராம வறுமை குறைப்புத் திட்டத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. அவை பின்வருமாறு

  • வாழ்வாதாரத்திட்டம்,
  • உரிமைகள் மற்றும் உடமைகளுக்கான திட்டம்
  • பொதுச்சேவைகள் மற்றும் பொதுச்சொத்துக்கள்
  • சமுதாய வளர்ச்சித் திட்டம்

இந்த வறுமை குறைப்புத் திட்டம் சம்மந்தப்பட்ட ஊராட்சி வளர்ச்சித் திட்டத்துடன் (GPDP) ஒரு அங்கமாக ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம்

தொற்றா நோய் திட்டத்தின் கீழ் சமூக வல்லுநர் (மருத்துவம்) என்ற நபரை மகளிர் சுய உதவிக்குழு மூலம் மருத்துவ தன்னார்வலராக நியமித்து போதிய பயிற்சி அளித்து அவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ தன்னார்வலர்கள் மக்களின் இல்லம் தேடிச்சென்று அவர்களுடைய தொற்றா நோய்களான நீரிழிவு, இரத்த அழுத்தம், கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், காசநோய் போன்றவைகளுக்குரிய பரிசோதனை மற்றும் மேல்சிகிச்சைக்குரிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நோய் குறித்த தகவல்களை TNPHR ஆப் மூலம் பதிவு செய்து, மருந்து மாத்திரைகளை சிகிக்சை பெறும்நோயாளியின் இல்லம் தேடிச் சென்று வழங்கி வருகின்றார்கள். 8713 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மருத்துவ தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட்டு துணை சுகாதார மையங்களுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

மணிமேகலை விருதுகள்

மணிமேகலை விருதானது 2021-2022ல் புதுப்பொலிவுடன் சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற அளவிலான கூட்டமைப்புகளின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அங்கீகரித்து அவர்களை பாராட்டும் விதமாக இவ்விருதானது வழங்கப்படுகிறது.

சமுதாயம் சார்ந்த அமைப்புகளை ஊக்குவிக்கவும் மகளிரின் திறமைகள் மற்றும் ஆளுமையை அங்கீகரித்து கௌரவிக்கும் வண்ணமாக குழுவின் சேமிப்பு, உள்கடன், வங்கிக்கடனை திரும்ப செலுத்துதல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சிறப்பாக செயல்படும் அமைப்புகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வட்டார, மாவட்ட, மாநில அளவில் மணிமேகலை விருதுகள் வழங்கப்படுகிறது

2022-23 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பணிகள்

குடும்ப தொலைநோக்க அட்டை

12525 கிராம ஊராட்சிகளில் கண்டறியப்பட்ட ஏழைகள், மிகவும் ஏழைகள் மற்றும் நலிவுற்றவர்கள் குடும்பங்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் சென்றடைவதை கண்காணிக்கவும் உறுதி செய்யவும், திட்டம் ரூ.313.12இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022-23ல் செயல்படுத்தப்படவுள்ளது

குடும்ப வாரியாக கண்டறியப்பட்ட தேவைகளின் விபரங்களை தொகுத்து சம்மந்தப்பட்ட வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக கண்டறியப்பட்ட இலக்கு மக்களுக்கு திட்டப்பலன்கள் சென்றடைவதை குடும்ப தொலைநோக்கு அட்டை மூலம் உறுதி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்

வட்டார அளவிலான தேவைகள் கண்டறியும் முகாம் நடத்துதல்

தமிழகத்திலுள்ள388 ஒன்றியங்களிலும் வட்டார அளவில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்குரிய தேவைகள் கண்டறிதல் முகாம் நடத்தி அதன் மூலம் கண்டறிந்த தேவையினை சம்மந்தப்பட்ட துறைகளான வருவாய்த்துறை, சமூக நலத்துறை, தாட்கோ, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை போன்ற துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தந்திட திட்டமிடப்பட்டுள்ளது

சமூக மறுசீரமைப்பு மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் குழு: (AGRASR – Action Groups Aimed At Social Reconstruction)

இந்திய அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் முதியோர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தினை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கான சுய உதவிக்குழுக்கள் 20 ஒன்றியங்களில் கடலூர், கன்னியாகுமரி ,விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 424 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும். 1275 குழுக்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 536 முதியோர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 739 குழுக்கள் வரும் நிதிஆண்டு 2022-23ல் அமைத்திடவும், பயிற்சி மற்றும் சுழல் நிதி வழங்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது

மீட்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு திட்டம்

இந்த திட்டம் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமைகள் குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு போதிய பயிற்சிகள் வழங்கி, சுழல்நிதி மற்றும் வாழ்வாதார நிதி வழங்கப்பட்டு அவர்களுக்கு அரசின் பிற துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தரப்படும். அவர்களின் தொழில் செயல்பாடுகளை வலுப்படுத்தி நிரந்தர மறுவாழ்வு அளிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மகளிர் மாதவிடாய் சுகாதார மேலாண்மை திட்டம்

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி - மாநில திட்டமிடல் நிதி ஆணையத்தின் கீழ் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கிடவும் 24 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட 105 பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள 3535 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் வளரிளம் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பயனடைவார்கள்