வாழ்வாதார மேம்பாடு

ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழு குடும்பங்களின் தொடர் மற்றும் நிலையான வருமானத்தை உறுதிப்படுத்த, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்வதை வாழ்வாதார இயக்கம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், வறுமை மற்றும் சமத்துவமின்மையை குறைக்கும் வகையில் ஒவ்வொரு சுய உதவிக் குழுவின் குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார முயற்சிகள் பரந்தளவில் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:

  • பண்ணை நடவடிக்கைகள்
  • பண்ணை சாரா நடவடிக்கைகள்
  • சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள்

பண்ணை வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள்

பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த நடவடிக்கைகள், பயிர் உற்பத்தி, முதல் நிலை மதிப்புக் கூட்டுதல் மற்றும் மதிப்புச் சங்கிலி மேலாண்மை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகின்றன. இவ்வியக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளால் சுய உதவிக் குழுவை சேர்ந்த வேளாண் மகளிர், விவசாயத் தொழிலாளர்களாக இருந்து பயிர் சாகுபடியாளராகவும், விவசாய தொழில் முனைவோராகவும் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர்.

இவ்வட்டாரங்களில், பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த வாழ்வாதார செயல்பாடுகளின் கீழ் பயிற்சி வழங்குதல், குழுக்கள் உருவாக்குதல் மற்றும் தொகுப்பு நடவடிக்கைகள் மூலம் சிறந்த பண்ணை செயல்பாடுகளை மேற்கொண்டு அதிக மகசூல் மற்றும் உரிய விலை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தரிசு நிலங்களில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் முதன்மைத் திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தொகுப்பு அணுகுமுறை மூலம் இந்நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகிறது.

உற்பத்தியாளர் குழுக்கள்

ஒரே வகையான பயிர் சாகுபடியில் ஈடுபட்டு ஒரே மாதிரியான வாய்ப்புகள் மற்றும் இடர்பாடுகளை சந்திக்கும் விவசாயிகளின் உற்பத்தி திறன் மற்றும் இலாபத்தை மேம்படுத்துவதற்காக குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.2.00 இலட்சம் செயல்பாட்டு மூலதனம் மற்றும் உட்கட்டமைப்பு உதவிக்காக துவக்க நிதியாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு, புதிய விவசாய சம்பந்தமான தொழிநுட்பங்கள், சிறந்த செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. தொழில் மேம்பாட்டிற்கான ஆதரவும் வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள்

பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த நடவடிக்கைகளை ஒத்திசைவுடன் சீரமைக்கும் முறையின் பலனை பெறுவதற்காக, விவசாயம் சார்ந்த பண்ணை நடவடிக்கைகள் கால்நடை வளர்ப்புடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதில், உயிர் உரம் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி செலவுகள் குறைக்கப்பட்டு பல்வேறு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன. 2 முதல் 3 கிராம ஊராட்சிகளிலிருந்து, 250 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு தொகுப்புக்கு ரூ.20.00 இலட்சம் வீதம் வாழ்வாதார சேவை மையம் அமைக்கவும், கால்நடைகள் வாங்கவும், ஊடுபயிர்கள் பயிரிடவும், இயற்கை இடுபொருட்கள் அலகு அமைக்கவும், இயந்திர வாடகை மையம் ஏற்படுத்தவும், சந்தைப்படுத்துதல் மற்றும் வணிக குறியீடு உருவாக்குவதற்கான பயிற்சிகள் அளித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகிறது.

இயற்கை வேளாண் தொகுப்புகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு, இயற்கை வேளாண் தொகுப்புகளை உருவாக்குவதன் மூலம் வேளாண்-சூழலியல் நிலைக்கு உகந்த விவசாய முறை மற்றும் இரசாயனங்கள் இல்லாத இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பாரம்பரிய விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்க முயற்சிக்கப்படுகிறது.

இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள அடுத்தடுத்த கிராமங்களைச் சேர்ந்த 50 விவசாயிகள் கொண்ட இயற்கை விவசாய தொகுப்பிற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, பதிவு செய்தல், சான்றிதழ்கள் பெறுதல் மற்றும் இயற்கை இடுபொருள் அங்காடி அமைப்பதற்காக ரூ.6.00 இலட்சம் வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் அதிக மதிப்புள்ள இயற்கை விளைபொருட்களை உற்பத்தி செய்ய ஒருங்கிணைந்த பண்ணை முறையும் உருவாக்கப்படும்.

சர்வதேச சிறுதானிய ஆண்டு - 2023

2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமது மாநிலம் சிறுதானிய சாகுபடியில் பெரும்பங்கு வகிக்கின்றது. சிறுதானியங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதால் அவை ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள் என உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறுதானிய உற்பத்திக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக வேளாண்மைத் துறையுடன் இணைந்து உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பது, சிறுதானிய உணவை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் புதிய சிறுதானிய பொருட்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டை ‘மகளிர் மற்றும் சிறுதானியம்’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட உள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

lp
    • ஊராட்சி அளவில் - சமூக வள பயிற்றுநர்
    • வட்டார அளவில் - வட்டார இயக்க மேலாளர்
    • மாவட்ட அளவில் - திட்ட இயக்குநர்
    • மாநில அளவில் - முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கைகள்

பண்ணை அடிப்படையிலான வாழ்வாதார நடவடிக்கைகள் குறிப்பிட்ட காலநிலையை சார்ந்துள்ளதால், காலம் தவறிய பருவமழை மற்றும் அதன் வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்யவும் மற்றும் வருமானத்தை பெருக்கவும் பல்வேறு பண்ணை சாரா தொழில்கள் ஊக்குவிக்கப்படுகிறது.

பண்ணை சாரா முயற்சிகளில் உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளின் கீழ்க்கண்ட செயல்பாடுகள் அடங்கும்:

    • குறு நிறுவன மேம்பாடு
    • தொகுப்பு மேம்பாடு - கைவினைஞர் & துறை சார்ந்த தொகுப்புகள்

குறு நிறுவன மேம்பாடு

குறு நிறுவனங்களின் முன்னேற்றமானது, தேவையின் அடிப்படையில் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி வழங்கி, முதலீட்டிற்கான வங்கி இணைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் உறுதி செய்வதாகும். சமுதாய வல்லுநர்கள் மூலம் புதிய நிறுவனங்கள் மற்றும் பழைய தொழில் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வணிக திட்ட அறிக்கை, சந்தை நுண்ணறிவு, சட்டபூர்வ தீர்வுகள், உரிமம் மற்றும் தரப்படுத்துதலுக்கு வழி வகை செய்யப்படுகிறது.

தொகுப்பு மேம்பாடு

தொகுப்பினை உருவாக்குவதால் உற்பத்தி செலவுகள் குறைந்து இலாப வரம்பு அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நிலை உயருகிறது. இத்தொகுப்பு முறையானது, ஊரகப் பகுதிகளில் உற்பத்தி பொருட்களை ஒருங்கிணைத்தல், தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல் ஆகிய செயல்களுக்கு ஆதரவு அளிக்கிறது. பொது சேவை மையத்தினை நிறுவுவதன் மூலம், உற்பத்தி பொருட்களின் தரம் பிரிக்கவும், பேக்கேஜிங் மற்றும் “மதி” என்ற பெயரில் வணிக குறியீட்டை ஏற்படுத்தி விற்பனை செய்ய உதவுகிறது.

கைவினைஞர் தொகுப்புகள் (கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள்)

ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள், பாரம்பரிய தொழில்களான கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் குறு தொழில் நிறுவன குழுக்களை உருவாக்கி தொகுப்பு அமைக்கப்படும். இத்தொகுப்புகளை அமைப்பதன் மூலம் அவர்களுக்குள் அனுபவ பரிமாற்றத்திற்கு உதவுகிறது மற்றும் புதிய தொழில்நுட்ப முயற்சிகளை பயன்படுத்துவதன் மூலம் வடிவமைப்பு, தரம் மற்றும் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.

துறை சார்ந்த தொகுப்புகள் (ஆடைகள், சணல் போன்றவை)

ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த குறு நிறுவனங்கள் ஒரே மாதிரியான மூலபொருள் அல்லது முடிவுற்ற பொருட்களைக் கொண்டு ஒரே மாதிரியான உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து துறைசார் தொகுப்புகளாக அமைக்கப்படுகிறது. இத்தொகுப்புகள் புதிய தயாரிப்புகளை வடிவமைக்க அவர்களது அறிவுத்தளத்தை விரிவுபடுத்துவதன் மூலம் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தருகிறது.

சுய உதவிக் குழு தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்

ஊரகப் பகுதிகளில் உள்ள மகளிர் குழுவினரால், உற்பத்தி செய்யப்படும் பல வகையான பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் குறைந்த அளவிலான விற்பனை வாய்ப்புகளே உள்ளது. ஆனால் நகர்ப்புரங்களில் இதற்கான தேவை மிகுதியாக உள்ளது.

சுய உதவிக் குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களின் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சந்தைக்குரிய நுண்ணறிவு மற்றும் ஆய்வு, பொருட்களை வகைப்படுத்துதல், உற்பத்தி பட்டியல் தயாரித்தல், பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் போன்றவற்றை மேம்படுத்துதல், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு நிலைகளிலான கண்காட்சிகள், விற்பனை அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையின்போது இயற்கை முறையில் விளைவித்த மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த உற்பத்திப் பொருட்களை கொண்ட பரிசு பெட்டகங்கள் விற்பனை செய்யும் முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப மாநில வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கமானது பிரத்தியேகமான பரிசு பெட்டகங்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

‘பூமாலை வணிக வளாகங்களை’ புதுப்பித்தல்

சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புகளை வழங்கும் வகையில் மாவட்ட தலைமையகங்களில் உள்ள நகரத்தின் பிரதான இடங்களில் பூமாலை வணிக வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் சிந்தனையில் உதித்ததே ஆகும். மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் மையமாக பூமாலை வணிக வளாகங்கள் செயல்படுகிறது. சந்தை நுண்ணறிவைப் பெறுவதற்கு மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் கண்காட்சிகளுக்கான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதிலும் இம்மையங்கள் முக்கிய அங்கம் வகிக்கிறது.

மதி விற்பனை அங்காடி மற்றும் மின் வண்டிகள்

சுய உதவிக் குழு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நகர்ப்புரம் மற்றும் சுற்றுலா தலங்களில் தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது. எனவே, சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனையை மேம்படுத்தும் பொருட்டு மாநிலம் முழுவதும் விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் நலிவுற்றோரின் உற்பத்தி பொருட்களின் விற்பனையை உயர்த்தும் வகையில் அதிக இடங்களுக்கு சென்று பெருமளவில் விற்பனை செய்திடும் வகையில் மின் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

    • ஊராட்சி அளவில் - சமூக வள பயிற்றுநர்
    • வட்டார அளவில் - வட்டார இயக்க மேலாளர்
    • மாவட்ட அளவில் - திட்ட இயக்குநர்
    • மாநில அளவில் - முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்