தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்இணைப்பு மற்றும் நிதி உள்ளாக்கம் ஆகியவற்றை செயல்படுத்திட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) வழிகாட்டுதலில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் பொருளாதார சுயசார்பிற்கு வலுசேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எய்திடவும், சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தந்திடவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 10.05.2023 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்களும், சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் திரு. நிராஜ் பாண்டா அவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், பாரத வங்கியின் துணைப் பொதுமேலாளர் திரு. ஜெகதீஸ்வர் கர்ரி அரசு மற்றும் பாரத ஸ்டேட்வங்கியின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சுய உதவிக் குழுக்களின் வங்கி இணைப்பை அதிகரிப்பது மற்று கடன் வழங்குவதில் மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளை செயல்படுத்துவது, கிராமப்புற ஏழைகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் சுழற்சியை மேம்படுத்துவது, கடன் திருப்பத்திற்கான எளிய வழிமுறைகளை செயல்படுத்துவது போன்ற பயன்கள் கிடைக்கும். மேற்கூறியவற்றைத் தவிர, முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் பிற அரசு வழங்கும் திட்டங்களின் கீழ் சுய உதவிக் குழுக்களின் தகுதியுள்ள பெண் தொழில்முனைவோருக்கு SBI வங்கிக் கிளைகள் கடன் வசதிகளை வழங்கும்.